கலந்தாய்வில் முறைகேடு! - சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது



பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிகளுக்குப் புறம்பாக பணி ஆணை வழங்குவதில் நடந்த முறைகேட்டில்தற்காலிக பணி ஆணை திடீரென
முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் நிரந்தர பணிமாறுதல் ஆணை வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறவழியில் உயிர் துறக்கும் வரை தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர் செல்வக்குமாரிடம் பேசினோம்., " கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக தொடக்ககல்வி துறைக்கு  பல மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் பாதிக்கபட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 4 முறை புகார் மனு அளித்தோம். அந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டு மனுதாரர்களின் கோரிக்கையை விரைந்து செயல்படுத்தும் படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இதனைக் கண்டித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தால், தற்காலிக மாற்றுப் பணி ஆணை வழங்கப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியில் சேர்ந்து கொண்டோம். இந்நிலையில், கடந்த 12ம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோரை மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் செளந்தரநாயகி ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். அத்துடன் முறைகேடாக மாறுதல் பெற்ற ஆசிரியர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்

பணிமாறுதலுக்கு முழுத்தகுதி உள்ள என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கிடாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.எனவே, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செளந்தரநாயகி மீதும் அவர் செய்து வரும் முறைகேடுகளுக்கு துனைபோகும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தகுதியான ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிட வலியுறுத்தியும்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அறவழியில் உயிர் துறக்கும் வரை தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியை சாந்தா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.