கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான,
இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, ஜன., 29ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தலா, 12 ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப, இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, விருதுக்கு தகுதியானோர் பட்டியல், அனுப்ப வேண்டாமென, நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. இதோடு, கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர், அய்யண்ணனிடம் கேட்ட போது, ''கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் தகவல் வெளியாகலாம்,'' என்றார்