பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில், எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.


அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆண்டின், 210 வேலை நாட்களிலும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு நற்சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது

அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாநிலத்தில் உள்ள, 45 ஆயிரத்து, 120 பள்ளிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 51 பேர் மட்டுமே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்துள்ளனர்.மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில், 37. 81 லட்சம்மாணவர்களில், 20 ஆயிரத்து, 739 மாணவர்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை உயர, பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும்; அதில், எங்களின் தலையீடே இருக்காது; வெளிப்படைத் தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த விழாவில், சால்வைக்கு பதிலாக புத்தகம் அளித்தனர். அதிலொரு புத்தகம், 'கண்டேன் புதையலை' என்ற தலைப்பில் இருந்தது. புதையலான கல்வியை மாணவர்களுக்கு தர, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு புதிய நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

பிளஸ் 2 படிக்கும், 70 ஆயிரத்து, 432 மாணவர்கள், போட்டி தேர்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, மார்ச், 20க்குள், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். அதில், போட்டி தேர்வு பயிற்சி பாடங்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி, எட்டு கல்லுாரிகளில், தலா, 500 பேர் என, 4,000 பேருக்கு, உணவு, உறைவிடத்துடன், 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.