அரசின் சலுகை திட்டத்தில் இன்ஜி., கல்லுாரி பருவ தேர்வு : 13 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி

இன்ஜி., கல்லுாரிகளில், குறிப்பிட்ட காலத்தில் படிப்பை முடிக்காத, 13 ஆயிரம் மாணவர்களுக்கு, கூடுதல் சலுகையில் தேர்வு எழுத அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, இன்ஜி., மாணவர்கள், தங்கள் படிப்பில் சேர்ந்த, ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து பாடங்களையும் எழுதி, பட்டம் பெற்று விட வேண்டும். அதற்கு பின்னும், சில பாடங்களில் தோல்வியாகி, 'அரியர்' வைத்தால், அதை எழுத அனுமதி கிடையாது.


இந்நிலையில், அண்ணா பல்கலையின், இன்ஜி., கல்லுாரிகளில், ஏழு ஆண்டுகளுக்கு மேல் படிப்பை முடிக்காதவர்கள், 'அரியர்' பாடங்களை முடிக்க, சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், உயர்கல்வித்துறை இந்த சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையில், பிப்., மற்றும் ஆக., என, இரண்டு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகையின்படி, 19ம் தேதி முதல், மார்ச், 21 வரை, அண்ணா பல்கலை சார்பில், எழுத்து தேர்வு நடக்கிறது. 

இதற்கான செய்முறை தேர்வுகள், பிப்., 12ல் துவங்கின; வரும், 17ல் முடிகின்றன. இந்த தேர்வுக்கு, 13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ''தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், தலா ஒன்று என, 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 ஆயிரம் மாணவர்களுக்கு, 2,300 வகைகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா தெரிவித்துள்ளார்