TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சிவழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி‘நீட்’ தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும் என்றார்.
புதிய கல்விக்கொள்கை:
 போலியோ சொட்டு மருந்து முகாமை கோபியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், லண்டனில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.