மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி:பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

 ''மன அழுத்தம் ஏற்படாமலிருக்க மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

நடவடிக்கை

சென்னை, தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தனியார் பள்ளி மாணவன் இறந்த தகவல் கிடைத்ததும், துறை செயலர் மற்றும் கல்வித்துறை இயக்குனர்களை அழைத்து, எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எந்த பள்ளியாக இருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, மாணவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க, தேவையான பயிற்சி அளிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்க, 'கவுன்சிலிங்' கொண்டு வரப்படும். 

பள்ளியில் விருப்பப்பட்ட மாணவர்களுக்கு, யோகா பயிற்சி அளிக்கப்படும். உடல் திறனை மேம்படுத்த, பள்ளிகளில் உள்ள இடங்களில், அவர்களுக்கு தேவையான விளையாட்டுகள் கற்றுத் தரப்படும்.

மாணவர்களுக்கு, வாழ்க்கையில் எதையும் சந்திக்கும் திறன் ஏற்பட, அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவன், எந்த நிலையிலும், ஆபத்தை எதிர்கொள்ள முடியும். 


விளையாட்டு வகுப்பு

மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் விளையாட்டு வகுப்பு இருந்தது. அனைவரும் படிக்க வேண்டும் என வற்புறுத்தியதால், விளையாட்டில், மாணவர்கள் ஆர்வம் குறைந்து வருகிறது.டான் பாஸ்கோ பள்ளி மாணவன் இறப்பு விவகாரம் தொடர்பாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.