தென் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை;'தென் கடலோர மாவட்ட பகுதிகளில், இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வட கிழக்கு பருவமழை முடிந்து, பனிக்காலம் நிலவுகிறது. ஜன., 15க்கு பின், பனியின் அளவு லேசாக உயர்ந்து
வருகிறது. இரவிலும், அதிகாலையிலும் மட்டும் குளிர் நிலவுகிறது. பகலில், மிதமான வெயில் பதிவாகிறது.இந்நிலையில், 'வங்க கடலின் தென்பகுதியில், மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்றும், நாளையும், தென் கடலோர மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற இடங்களில், வறண்ட வானிலை நிலவும்; சென்னையில் குறைந்த பட்சம், 21; அதிகபட்சம், 31 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.