புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்

''புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்பு பணி நடந்துவருகிறது.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. 


இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம், கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார்.பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.