உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சங்கங்கள் எதிர்ப்பு

 சிவகங்கை:உயர்கல்வி பயின்ற 4,322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அக்கூட்டணி மாவட்டத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஜோசப்சேவியர் கூறியதாவது:


ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப தங்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ள உயர்கல்வி பயில்கின்றனர். இதனை ஊக்கப்படுத்த அரசும் உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு அளித்து வருகிறது.


தொடக்கக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் உயர்கல்வி படிப்பதற்கு ஆசிரியர்கள் முறையாக விண்ணப்பித்து வந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உயர்கல்வி படிப்பதில் தடை ஏற்பட்டது.


இதையடுத்து மாநிலம் முழுவதும் 4,322 பேர் முன்அனுமதி பெறாமலேயே உயர்கல்வி பயின்றனர். அவர்களுக்கு பின்னேற்பு அனுமதி கொடுக்க வேண்டுமென, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது. இதையடுத்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


ஆனால் முன்அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4,322 ஆசிரியர்களுக்கும் பின்னேற்பு அனுமதி வழங்க 
வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.