'நீட்' நுழைவு தேர்வு அறிவிப்பு எப்போது?

பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தேதி, அதிகாரப்பூர்வமாக, அடுத்த வாரம்
வெளியிடப்பட உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, அகில இந்திய அளவிலான, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 



தமிழகத்தில், நீட் தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், நீட் தேர்வை எழுதுவதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, மத்திய அரசு அறிவித்ததால், தமிழக அரசு ஏற்றது.

இந்த ஆண்டு, நீட் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில், சி.பி.எஸ்.இ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., சார்பில் வினாத்தாள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு, நீட் தேர்வை, மே, 6ல் நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்து உள்ளது.


இது குறித்து, அனைத்து மாநில தேர்வுத் துறைக்கும், நீட் தேர்வுக் குழு சார்பில், அதன் இணை செயலர், பரத்வாஜ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை சமீபத்தில், 'லீக்' ஆனது. அதன் வழியே, மே, 6ல், நீட் தேர்வு நடக்கும் என தெரிய வந்துள்ளது.


இந்நிலையில், நீட் தேர்வு தேதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப பதிவு துவங்கும் தேதி, பதிவு முடியும் நாள், ஹால் டிக்கெட் வழங்கப்படும் நாள், பாடத்திட்ட விபரம், தேர்வு மையங்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள், இந்த அறிவிக்கையில் இடம் பெறும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன