தேர்வு முறைகேடு : அரசு அறிக்கை

''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, 2017
செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. அப்போது, தேர்வு முடிவில், 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. உடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரச்னையால், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த சிறப்பு ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணி, வேளாண் பயிற்றுனர் பணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான, தேர்வு அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறுகையில், ''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில், விசாரணை அறிக்கை தாக்கலாகும். அதை தொடர்ந்து, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கும்; புதிய தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்,'' என்றார்.