சித்தா படிப்புக்கும் 'நீட்'

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.இந்நிலையில் சித்தா, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல், அறிவித்தது.


ஆனால் தமிழக அரசு, இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவசிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது; சிறந்த டாக்டர்களை உருவாக்கும் வகையில் இதில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. இளநிலை படிப்பையும், நீட் தேர்வுஅடிப்படையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.எனவே நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் தான், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனி நீட் நுழைவு தேர்வு கிடையாது. பொதுவான நீட் தேர்வே இதற்கும் பொருந்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.