கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் விழா போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லுாரி, பல்கலை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் துாய்மைக் கேடு ஏற்பட்டதுடன் மைதானங்களில் விளையாட்டு பொருட்களும் சேதமடைந்தன. 


மேலும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அரசு விழாக்களை கல்வி நிலையங்களில் நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கருத்தரங்கு போன்ற கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர, பொருட்காட்சிகள் நடத்துவது, நலத்திட்டங்களை வழங்குவது போன்ற அரசு விழாக்களுக்கு கல்வி நிலையங்களை பயன்படுத்த கூடாது என, கலெக்டர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.