நீட் தேர்வில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என ஜவடேகர் உறுதி

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுவதற்கு விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடப்பாண்டு 2018 நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.

 இந்த சூழலில் நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில்  கடந்தாண்டு பாடத்திட்டத்தின் படியே, நடப்பாண்டிலும் நீட் தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அரசியல் கட்சிகள் தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்து உள்ளார் என மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிஉள்ளார். நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்து உள்ளார் எனவும்  தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார். 
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks