மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்!!!

மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்

பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர் ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார். இந்த காட்சி, ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவுகிறது.


கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை, பள்ளி மாணவர்கள் தவறு செய்தால், அவர்களை பெற்றோர் அனுமதியுடன், ஆசிரியர்கள் தண்டிக்கும் பழக்கம் இருந்தது. அதனால், பெற்றோருக்கு பயப்படாத மாணவர்கள் கூட, ஆசிரியருக்கு பயந்து, தவறுகளை குறைத்து கொண்டனர்.

சமீப காலங்களாக, பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கு, அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பதால், மாணவர்கள் தவறு செய்தால், ஆசிரியர்களால் தண்டிக்க முடியாத நிலை உள்ளது.


மேலும், பல மாணவர்கள், உடல் மற்றும் மனரீதியாக வலுவிழந்த நிலையில் உள்ளனர். அதனால், ஆசிரியர்கள் சாதாரணமாக கண்டித்தால் கூட, தற்கொலை செய்வது; வீட்டை விட்டு மாயமாவது என, விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதற்கு பயந்து, பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிகளில் பாடத்தை நடத்துவதுடன் பணியை முடித்து கொள்கின்றனர். மாணவர்களின் ஒழுக்க விஷயங்களில் தலையிடுவதில்லை.ஆனாலும், சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களை திருத்தி விட வேண்டும்; அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என, கடமையே கண்ணாக உள்ளனர்.


இந்த வரிசையில், விழுப்புரம், காமராஜ் அரசு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு, வித்தியாசமான முறையில் மாணவர்களை நெறிப்படுத்துகிறார். பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள், வகுப்புகளை சரியாக கவனிக்காத மாணவர்களை, வகுப்பறையில் முழங்காலால் நிற்க வைத்து, தானும் அவர்களுடன் மண்டியிட்டு நிற்கிறார்.


பின், அந்த மாணவர்களிடம் இரு கைகளையும் ஏந்தி கும்பிட்டு, 'தயவு செய்து நன்றாக படி; பெற்றோருக்கு மரியாதை கொடு; ஒழுக்கமாக நடந்து கொள்' என, கெஞ்சி கேட்கிறார். இந்த முயற்சியில், பல மாணவர்கள் திருந்துவதாக உறுதி அளிக்கின்றனர்.தலைமை ஆசிரியர் பாலு, தரையில் மண்டியிட்டு மாணவனை திருத்தும் படம், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவுகிறது.