தேர்தல் விழிப்புணர்வு கிளப் : கல்லூரிகளில் அமைக்க உத்தரவு

இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின் படி, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'தேர்தல் விழிப்புணர்வு கிளப்' அமைக்க, மாநில உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஓட்டுரிமை மற்றும் வாக்காளராகப் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன், ஜன., 25-ம் தேதியை, தேசிய வாக்காளர் தினமாக கடைபிடித்து வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு, இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில், எதிர்கால வாக்காளர்களான, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பல்கலை, கல்லுாரிகளில் புதிய வாக்காளர்களான மாணவர்களும், இந்த கிளப்பில் சேர்க்கப்படுவர். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், வாக்காளர்களின் உரிமை மற்றும் கடமை, அரசியல் அமைப்புகள், நீதிமன்றம், ஊடகங்களின் செயல்பாடுகள் சார்ந்த அறிவை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது இம்மன்றத்தின் நோக்கம். இதன் துவக்கவிழா, வரும், 25ம் தேதி நடக்கவுள்ளது. பொதுமக்களுக்கும், இம்மன்றங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மன்றங்களை ஒருங்கிணைக்க, மாநில, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு கமிட்டி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.