மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல்வர் பெருமிதம்

''தமிழகத்தில், மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20 சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


சென்னை, சி.கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாகத்தில், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், 'அம்மா அரங்கம்' கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, அறக்கட்டளை தலைவர், ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. அரங்கத்தை திறந்து வைத்து, 21 ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், சிதம்பரம் ஆகிய இடங்களில், ஆறு கல்லுாரிகளும், ஆறு உயர்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. அவர்களின் கல்விப் பணியை பாராட்டுகிறேன். ஒரு நாடு சிறந்து விளங்க, கல்வியும், சுகாதாரமும் அவசியம். எனவே, அறக்கட்டளையின் கல்விப் பணி தொடர வாழ்த்துகிறேன். பள்ளிக் கல்வித் துறைக்கு, தமிழக அரசு, ஆறு ஆண்டுகளில், 1.37 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.


ஏழு ஆண்டுகளில், 1,599 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜெ., வழியில், தமிழக அரசு, எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், மூன்று பல்கலை உறுப்பு கல்லுாரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியையும் நிறுவியுள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.