70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'

'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.


'டெண்டர்' விடுவதில், ஏற்பட்ட பிரச்னைகளால், 2016 - 17ம் கல்வியாண்டு முதல், லேப் - டாப்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதிய பின், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' உள்ளிட்ட, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. 

இத்தேர்வுகளில், தமிழக பாடத்திட்டத்தில் இல்லாத, பல்வேறு கேள்விகள் இடம் பெறுகின்றன.அதற்கேற்ப, அரசு பள்ளிகளில் பயில்வோர், தங்களை தயார்படுத்திக் கொள்ள, லேப் - டாப்கள் மிக அவசியம். அதற்காக, அவசர தேர்வாக கருதி, 70 ஆயிரம் பேருக்கு, இலவச லேப் - டாப்களை, விரைவில் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.


இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:நீட் தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் - டாப் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.

அதனால், இந்த கல்வியாண்டில் தரவேண்டிய, 5.43 லட்சம், லேப் - டாப்களில், முதல் கட்டமாக, 70 ஆயிரம் லேப் - டாப்களை, உடனடியாக கொள்முதல் செய்து, ஒரு மாதத்திற்குள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, புதிய, 'டெண்டர்' கோராமல், ஏற்கனவே, 'லேப் - டாப்'களை வினியோகித்துள்ள நிறுவனத்திடம், உடனடியாக கொள்முதல் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.