600 காலி இடங்களை நிரப்ப கோரி போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகம் முடிவு

தொழிற்கல்வி பாடத்திற்கு, 600 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இது குறித்து, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொது செயலர், ஜனார்த்தனன் கூறியதாவது:



அரசு பள்ளிகளில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிற்கல்வி பாடங்களில் படிக்கின்றனர். இதற்காக, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான, 600 இடங்கள், 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், வகுப்புகள் நடத்தப்படாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 600 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, 30 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், அனைத்து பள்ளிகளிலும், தொழிற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டு, அதற்காக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.