'எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு

எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள்,
பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 


தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டி, ஆவணமாக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம், 2012ல் துவங்கப்பட்டது. இதில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை, களையும் வகையில், அண்ணா பல்கலை தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், 2017 ஜூனில் உருவாக்கப்பட்டது. 

பள்ளி வாரியாக, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றிய தகவல்கள் அடிப்படையாக வைத்து, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. எனவே, 'ஆதார்' எண் கட்டாயம் இணைக்க வேண்டுமென, வலியுறுத்தப் படுகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் தகவல் பதிவேற்றும் பணிகள் முழுமை பெறவில்லை.
இடம் பெயர்வு காரணமாக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாக, புகார் எழுந்தது.


இதனால், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, நேற்று முதல், 25 வரை, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'எமிஸ் பதிவு எண் இல்லாத மாணவர்களின், தகவல்களை புதிதாக சேர்க்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

'இவ்வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வகை பள்ளிகளும், 25க்குள், மாணவர்களின் தகவல்களை பதிவேற்றும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இக்காலக்கெடு இறுதியானது என்பதால், தலைமையாசிரியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது' என்றார்