20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

மாணவர்களை தயார்படுத்துவதற்காக, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, பிளஸ் 2 முடித்ததும், அரசு பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும்,
ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.
தொழிற்கல்வி பயிற்சி


'லெண்ட் அஹேண்ட் இந்தியா' என்ற, பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியைதுவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள், படிப்பை முடிக்கும் போது, வேலை வாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், 20 லட்சம் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, மாணவர்களை தயார்படுத்த வசதியாக, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தரப்படுகிறது.
260க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி

வேலைவாய்ப்புக்கான தொழிற்கல்வி பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்; கட்டாயமில்லை. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சிறு வணிகம், ஆட்டோ மொபைல்ஸ், அழகு, உடல்நல பராமரிப்பு கலை என, 260க்கும் மேற்பட்ட தொழிற்கல்விகளில்
Advertisement
ஒன்றை, மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, மூன்று கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், 30 கோடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 2,000 பேருக்கு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், சிறப்பு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர், ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.