பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 


இத்தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து பாடத் திட்டங்களையும் பின்பற்றி, வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சியில், தமிழக மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், 'நீட்' தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கும் என, பல மாணவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., விதிகளில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் பொது பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர், 45 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என, 'நீட்' தேர்வு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.