பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு

பிளஸ் 1 பொது தேர்வு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், 26ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



தமிழக பாடத்திட்ட மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், இந்தாண்டு முதல், பிளஸ் 1 வகுப்பிற்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 200 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டிய தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.


பிளஸ் 1க்கு, அக மதிப்பீடு எண் வழங்க, தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி ஆய்வகங்களில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி, 'எக்ஸ்டர்னல்' என்ற, செய்முறை மதிப்பெண் வழங்குவது குறித்து, நேற்று முன்தினம் வரை, எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை.


அதனால், பிளஸ் 1க்கு செய்முறை தேர்வு உண்டா அல்லது அடுத்த ஆண்டு சேர்த்து நடத்தப்படுமா என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, தினமலர்  நாளிதழில், நேற்று முன்தினமும் செய்தி வெளியானது.இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவுப்படி, பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான சுற்றறிக்கை, அரசு தேர்வுத்துறையில் இருந்து, நேற்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:


 பிப்., 14 முதல், 26ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். அகமதிப்பீடுக்கு, அதே பள்ளி ஆசிரியரும், செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு, மற்ற பள்ளி ஆசிரியரையும் பணியில் அமர்த்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது


 பிளஸ் 1க்கு, ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டப்படி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். 

பிளஸ் 2வில் பின்பற்றப்படுவது போல், செய்முறை மதிப்பீடு வழங்க வேண்டும்

 தேர்வுகளில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது; மாணவர்களின் மதிப்பெண்களை ரகசிமாக பதிவு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைனில், தேர்வுத்துறைக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.