பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு

வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து, இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை

அறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது. 

இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி, மிலாடிநபி உள்ளிட்ட, 17 தினங்கள், 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்ப விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 

விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்துள்ளது.