நிலவில் தரையிறங்க தயாராகும் இஸ்ரோ!

தனது பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் மூலம் உலகின் மிகச் சில முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்புகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ), தனது போட்டியாளர்களுக்கு பலத்த போட்டியை அளிக்கும் வகையில் மேலும் பல சாதனைத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கெனவே, வரும் 2019-ஆம் ஆண்டில் சூரியனுக்கு விண்கலம் அனுப்பவிருப்பதாக அறிவித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இஸ்ரோ, ஆளில்லா ஆய்வுக்கலத்தை நிலவில் தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.
"சந்திரயான் - 2' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளித் திட்டம்தான், நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் திட்டமாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அந்த விண்கலம் சந்திரனை நோக்கி அனுப்பப்படும் என்று தெரிகிறது.
சீனாவால் கடந்த 2013-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட "யூடு' ஆய்வுக் கலம்தான் நிலவில் தரையிறங்கிய கடைசி ஆய்வுக் கலமாகும். அதற்குப் பிறகு தற்போது இந்தியாவின் சந்திரயான்-2 ஆய்வுக்கலம்தான் நிலவின் தரையில் வலம் வரவுள்ளது.
நிலவில் இந்தியா விண்கலம் அனுப்பி ஆய்வு மேற்கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2008-ஆம் ஆண்டில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவின் பரப்புக்குள் நீருக்கான மூலப் பொருள் இருப்பதை அந்த விண்கலம் கண்டறிந்தது.
இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு அனுப்பப்படவிருக்கும் சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றும் ஒரு விண்கலம், நிலவின் தரைப் பகுதியில் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் 6 சக்கரங்களைக் கொண்ட ஆய்வுக் கலம், விண்கலத்திலிருந்து நிலவின் தரைப் பகுதிக்கு ஆய்வுக் கலத்தைக் கொண்டு சென்று தரையிறக்கும் செலுத்துக் கலன் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதலில் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் சந்திரயான்-2 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும்போது அந்த விண்கலத்தில் இருந்து செலுத்துக் கலம் தனியாகப் பிரிந்து நிலவின் தரையை நோக்கி விழச் செய்யப்படும். பிறகு, தரையை நெருங்கும்போது தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு அந்த செலுத்துக் கலம் மெதுவாகவும், பத்திரமாகவும் நிலவில் தரையிறங்கும்.
அதையடுத்து, தன்னுடன் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கலத்தை அந்த செலுத்துக் கலம் விடுவிக்கும். பிறகு, இஸ்ரோவின் கட்டளைக்கிணங்க நிலவின் மேற்பரப்பில் உலா வரும் அந்த ஆய்வுக் கலம், மண் பரிசோதனை, நிலவில் உள்ள பொருள்களின் இராசயனத் தன்மை பரிசோதனைகள் போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கலத்துக்கு அந்தத் தகவல்களை அனுப்பும். அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை அந்த விண்கலம் இஸ்ரோ ஆய்வு மையத்துக்கு அனுப்பும்.
சுமார் 3,290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம், செலுத்துக் கலம், ஆய்வுக் கலம் என அனைத்துமே முழுக்க முழுக்க இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!