பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.


இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், 'ரேங்கிங்' முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, 'ஹெல்ப்லைன்' திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.