TRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை

கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு 
வாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., சார்பில்,செப்., 23ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்; முடிவுகள் விரைவில் வர உள்ளது.



இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஏற்பட்ட, 482 காலியிடங்களுக்கும் சேர்த்து, இந்த தேர்விலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம், சிறப்பாசிரியர்கள், சுப்ரமணி, லட்சுமிபதி மற்றும் காந்தி ஆகியோர் மனு அளித்துஉள்ளனர்.

இதுகுறித்து மனு அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:நடப்பு கல்வி ஆண்டில், சிறப்பு பாடப்பிரிவில், 482 காலி இடங்கள் ஏற்பட்டுஉள்ளன. அவற்றை, முக்கிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் இடங்களாக மாற்றப்பட உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி மாற்றினால், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே, சமீபத்தில் நடந்த போட்டி தேர்வின் அடிப்படையில், கூடுதலாக, 482 இடங்களை சேர்த்து, பணி நியமனம் செய்யப்பட வேண்டும். 

மேலும், டி.டி.சி., என்ற ஆசிரியர் தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, சிறப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.