" TET " முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'

பள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2011, நவ.,15ல், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.இந்த அறிவிப்பு வந்த பின், 2011, டிசம்பரில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு, டெட் அறிவிப்புக்கு முன்பே, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அதே பணி நியமனத்தில், டெட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு டெட் கட்டாயம் ஆனது. பணியில் நியமிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.அதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தகுதி காண் பருவம் முடித்த பின்னும், பணிவரன்முறை உத்தரவு வழங்கப்படவில்லை.
இது குறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:
தேசிய கல்வி கவுன்சிலின் உத்தரவு, 2010ல், வெளியாவதற்கு முன், பணி நியமனத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதில் நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு, டெட் தேர்ச்சி கட்டாயம் இல்லை. இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக நடந்தாலும், அவர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை.அவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பணிவரன்முறை உத்தரவு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.