சத்துணவில் முட்டை நிறுத்தமா? : அமைச்சர் சரோஜா விளக்கம்

சென்னை: 'அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில், எவ்வித தடையுமின்றி, முட்டை வழங்கப்படுகிறது' என, சமூகநலத் துறை அமைச்சர், சரோஜா தெரிவித்து உள்ளார்.

'முட்டை விலையேற்றம் காரணமாக, அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகளுக்கு, முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது' என, தகவல் வெளியானது. முட்டை, 'சப்ளை' நிறுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு பதிலளித்து, அமைச்சர் சரோஜா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அங்கன்வாடி மையங்களில், 1 - 2 வயது குழந்தை களுக்கு, வாரம் ஒரு முட்டை; 2 - 5 வயது குழந்தைகளுக்கு, வாரம் மூன்று முட்டை; பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், 15 வயது வரையிலான, மாணவ - மாணவியருக்கு, வாரம் ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், 69.31 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். 2013க்கு முன், முட்டை கொள்முதல், அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் மேற்கொள்ளப்பட்டன. அதில், பல்வேறு குறைபாடுகள் இருந்தன. எனவே, மாநில அளவில், 'டெண்டர்' விடப்பட்டது.
இதற்காக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழு, முட்டை வினியோகஸ்தர்கள் குறிப்பிட்ட விலையை, தேசிய ஒருங்கிணைப்பு குழு விலையுடன் ஒப்பிட்டு, மற்ற செலவினங்களையும் ஆராய்ந்து, முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த நடைமுறைகளை பின்பற்றி, 2017 - 18க்கு, ஒரு முட்டை விலை, நான்கு ரூபாய், 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் முட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவ்விலை, 2018 ஜூலை வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான முட்டைகள், வாரம் ஒருமுறை, மொத்தமாக வினியோகம் செய்யப்படுகின்றன. பள்ளி மாணவ - மாணவியருக்கு, வாரம் இரு முறை முட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், முட்டை வழங்கல் நிறுத்தப்பட்டதாக, தவறாக செய்தி வெளியாகி உள்ளது. அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களிலும், எவ்வித தடையுமின்றி, முட்டைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.