வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை

'வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் நிலையில், அதன் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. அதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.


வங்க கடலில்,புதிய,காற்றழுத்தம்,மழை தொடரும், என எச்சரிக்கை
வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இது, இலங்கை வரை நீண்டு நிலை கொண்டு இருந்தது. அதனால், அக்.,29 இரவு முதல், தமிழக கடலோர மாவட்டங்களில், தொடர் மழை பெய்து வருகிறது.மேலடுக்கு சுழற்சி, படிப்படியாக நகர்ந்து, நேற்று, மன்னார் வளைகுடாவிற்கு தெற்கே, இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது. அதனால், மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:

வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. வங்கக் கடலில், மன்னார் வளைகுடா அருகில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, இலங்கை அருகில் தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. அதனால், இன்று, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வடக்கு
மற்றும் கிழக்கு கடலோர மாவட்டங்களில், மழை விட்டு விட்டு பெய்யும். சில நேரங்களில், கனமழை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சிக்கு வடக்கே, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், புதுச்சேரி போன்ற கடலோர மாவட்டங்களின் அருகில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கும் இடம் வரை நீண்டுள்ளதால், கடலோர மாவட்டங்களில், மழை தொடரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


11 சதவீதம் குறைவு

இதுவரை பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழையில்,11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் முதல், டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. அக்., 20க்குள், வடகிழக்கு பருவமழை துவங்க வேண்டும்.ஆனால், இந்த ஆண்டு, ஒரு வாரம் தாமதமாக, அக்., 27ல் துவங்கியது; அக்., 29ல் தான் தீவிரம் அடைந்தது. அக்டோபர் நிலவரப்படி, தமிழகத்தில் பெய்த மழை அளவு பட்டியலை, வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, அக்டோபரில்,18.7 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். 11 செ.மீ., குறைவாக,6.7 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. புதுச்சேரியில்,27.9 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும்; ஒன்பது சதவீதம் அதிகமாக, 30.5 செ.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டங்களில், திருவள்ளூர், திருவண்ணாமலையில், 42; காஞ்சிபுரம், 34; வேலுார், 33; விழுப்புரம், 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில், 15 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. துாத்துக்குடியில்,
இயல்பான அளவில், 35 சதவீதமே பெய்து உள்ளது. ராமநாதபுரம், 64; திருச்சி, நீலகிரி, 46; திருநெல்வேலி, 43; கரூர், 40, ஈரோடு, 38 சதவீதம் மழை பற்றாக்குறைஏற்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை தொடர்வதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்டங் களில் உள்ள பள்ளிகளுக்கு, இன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை உட்பட, கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களாக கனமழை தொடர்ந்து வருகிறது. பல இடங்களில், மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. கன மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, இன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஏரிகளில் நீர் இருப்பு

வட கிழக்கு பருவ மழையின் தீவிரத்தால், சென்னை குடிநீர் ஏரிகளின் கையிருப்பு, 2
டி.எம்.சி.,யை நெருங்கி உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும், 11 டி.எம்.சி., மொத்த கொள்ளளவு உடையவை.
வறண்டு கிடந்த ஏரிகளுக்கு, ஆக., முதல் நீர்வரத்து கிடைத்தது. இதனால், நீர் கையிருப்பு, 1 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நான்கு ஏரிகளிலும், 1.37 டி.எம்.சி., நீர் இருந்தது.

மேலும், வரத்து அதிகரித்ததால், நேற்று நீர் இருப்பு, 1.74 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. நீர் இருப்பு இன்று, 2 டி.எம்.சி.,யை எட்ட வாய்ப்புள்ளது. 2016ல், இதே நாளில், 1.28 டி.எம்.சி., மட்டுமே இருந்தது.