மாணவிகளே பள்ளி கழிப்பறையை சுத்த செய்த அவலம்: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவியர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு பிளஸ் 2 வரை சுமார் ஆயிரம் மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் பயன்படுத்துவதற்காக 10 கழிப்பறைகள் உள்ளன. தனியார் சுகாதார பணியாளர் மூலமாக, இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாதம் ரூ.2,500 அரசு வழங்குகிறது. கடந்த மாதம் வரை, இப்பள்ளியில், தனியார் மூலம், கழிப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி, வகுப்பு மாணவியர் தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் இருந்தவர்களை அழைத்த, தலைமை ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால், பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என, எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சத்தில் ஆழ்ந்த மாணவியர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி அழுதபடியே கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தனர்.

அழுது கொண்டே கழிவறையை மாணவியர் சுத்தம் செய்த புகைப்பட காட்சி வெளியானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் முதன்மை கல்வி அலுவலகர் ராஜேந்திரன் பள்ளியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள தொடர்ந்து நடந்து வருவதாக புகார்கள் வரும் நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!