முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுத் தேர்வு எழுதும், ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அரசு பொதுத் தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ௧௦ முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, இடைத்தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
காலாண்டுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இடைத்தேர்வில் வினாத்தாள் இடம்பெறும். தற்போது, முன் அரையாண்டு தேர்வு நடத்துவதால், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கு, போதிய அவகாசம் இல்லை. எனவே, முன் அரையாண்டு தேர்வை மாற்றி, இடைத்தேர்வு மட்டும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மெட்ரிக் பள்ளிகளில் அதிக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். அதே போல், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.