ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு

திண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 9 ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை வளர்க்க புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.



இதன்படி ஒரு பள்ளியில் இருந்து 100 மாணவர்கள் ஒருநாள் கல்லுாரிக்கு சென்று அங்குள்ள நுாலகம், ஆய்வகம், கம்ப்யூட்டர் லேப் ஆகியவற்றை பார்வையிடுவர். அங்குள்ள பேராசிரியர்கள் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு பாடத்தை நடத்துவார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்து ஆராய்ச்சிக்கு துாண்டுதலாக அமையும். இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இவ்வகையில், ஒரு பள்ளிக்கு 100 பேர் வீதம் 10 பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் இன்று (15ம் தேதி) கல்லுாரிகளுக்குச் செல்கின்றனர்.
எந்தெந்த பள்ளிகள்
ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காந்திகிராம பல்கலைக்கும், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் எஸ்,.எஸ்.எம். பொறியியல் கல்லுாரிக்கும், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.எஸ்.என்.ஏ.கல்லுாரிக்கும், கோமணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லுாரிக்கும், இ.ஆவாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வத்தலக்குண்டு பாலிடெக்னிக்கிற்கும் செல்கின்றனர்.
குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரிக்கும், தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன கலையம்புத்துார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பழநி சுப்பிரமணியம் பொறியியல் கல்லுாரிக்கும், வில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கும் செல்கின்றனர்.
மாணவர்களுக்கு அழைத்து செல்லும் போக்குவரத்து செல்வு, சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்,. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா பயஸ் செய்து வருகின்றனர்