'வாட்ஸ் ஆப்' குழு துவக்கிய, 'ஸ்மார்ட்' வகுப்பு

'வாட்ஸ் ஆப்' மூலம் இணைந்த நண்பர்கள் குழுவினர், உடுமலை அருகே, வெஞ்சமடை அரசுப் பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு துவக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தை சரியான வழியில் பயன்படுத்தினால், புதிய மாற்றத்தை உருவாக்கலாம் என, செயல்பட்டு வருகிறது, 'நாட்டாம தீர்ப்ப மாத்து' என்ற வாட்ஸ் ஆப் குழு.




இக்குழுவில் உள்ளவர்களில் பலருக்கும், பலரது முகம் தெரியாது; பேசியதும் இல்லை. ஆனாலும், குழுவில், 70 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமே, இயலாதவர்களுக்கு உதவுவது தான்.


கடந்தாண்டு, செப்., மாதம் துவக்கப்பட்ட குழுவின் மூலம், இதுவரை, ஐந்து லட்சம் ரூபாய் வரை, கல்வி, தொழில் என, பலருக்கும் உதவிகள் சென்றடைந்துள்ளன.
குழுவில் உள்ள நண்பர்கள் மூலம், என்ன உதவி, யாருக்கு என்பதை பதிவிட்ட பின், அக்குழு உறுப்பினர்கள், நேரடியாக சென்று, விசாரிக்கின்றனர். அதன்பின், தொகையாகவோ அல்லது, அவர்களுக்கு தேவையானதையோ செய்து தருகின்றனர்.


உடுமலை, வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறப்பான ஆசிரியர்கள், திறமையுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான தொழில்நுட்ப வசதி போதிய அளவில் இல்லை என, குழு நண்பர் ஒருவரால் பதிவிடப்பட்டது. 
தொடர்ந்து, குழுவினர் பள்ளிக்கு சென்று, விசாரித்து, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்குவதற்கான, ஏற்பாடுகளை துவக்கினர்.


தற்போது, பணிகள் முழுமையாக முடிந்து, ஸ்மார்ட் வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. குழு, 'அட்மின்' பாபு சபாபதி மற்றும் உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.