மாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது

திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த, 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். 


நவ., 25ல் வழக்கம் போல், மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். பணியில் இருந்த ஆசிரியை விஜயா, 47, அந்த மாணவனை கூப்பிட்டு, ஏன் தலைமுடி நீளமாக வைத்துள்ளாய்? என, கேட்டுள்ளார். பின், சக மாணவரைவிட்டு முடியை வெட்ட சொல்லியுள்ளார். அன்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன், பள்ளியில் நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளான். 


அவர், கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், இச்சம்பவம் உண்மை என, தெரியவந்ததையடுத்து, விஜயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புகாரையடுத்து, கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, விஜயாவை நேற்று கைது செய்தனர்.