தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி

மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர்.
'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.



'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து, தமிழகம் முழுவதும், 30 இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.