அரசு பள்ளிகளில் படிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள்

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வி.ஐ.பி., கலாசாரத்தில் இருந்து வெளிவந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.


சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த, வி.ஐ.பி., கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும், எளிமையை கடைப்பிடிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்ட, எஸ்.பி.,யான ரவிசங்கர், தன் மகளை, அங்குள்ள ஓர் அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

அதேபோல், பல்ராம்பூர் மாவட்ட கலெக்டர், அவனீஷ் குமார் சரண், தன், 5 வயது மகளை, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்த்துள்ளார். இதற்கு முன், அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருந்தார்.ஜஷ்பூர் மாவட்டம் பத்தல்காம், எம்.எல்.ஏ., சிவசங்கர் பைங்கராவும், தன் இரண்டு மகள்களையும், அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிறார். தற்போது, தன் மகனையும் அரசு
பள்ளியில் சேர்த்துள்ளார்.

அதிகாரிகளின் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் சமமாக அமர்ந்து படிப்பதுடன், பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவையும் சாப்பிடுகின்றனர். இதனால், உடன் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதால், பள்ளியின் சூழ்நிலை மாறியுள்ளது.வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் சுத்தமாக இருப்பதுடன், ஆசிரியர்களும் உற்சாகமாக பாடங்களை நடத்துகின்றனர். இதனால், கல்வியின் தரம் உயரும் என, சாமானிய மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.