பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அடுத்த ஆண்டில், பிளஸ் 2 எழுத உள்ள தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


அவர்கள் எழுத்து தேர்வு மட்டும் உள்ள பாடங்களையே தேர்வு செய்ய முடியும். பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும், 10 மதிப்பெண் அகமதிப்பீடாகவும், 70 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வும் நடத்தப்படும். இந்நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடக்குமா அல்லது முந்தைய அரசாணையில் கூறியபடி, பிளஸ் 2வில் சேர்த்து நடத்தப்படுமா என, குழப்பம் இருந்தது. 

இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும்; அதற்கான வழிமுறைகள் என்ன; இதுவரை நடத்தப்பட்டது போல், பெயரளவில் நடத்தப்படுமா அல்லது மற்ற பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்பட்டு, முழு கட்டுப்பாட்டுடன் நடக்குமா என, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறை இது குறித்து ஆலோசித்து, பிளஸ் 1 செய்முறை தேர்வு குறித்து, குழப்பங்கள் இல்லாத சரியான வழிகாட்டுதலை, விரைவில் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.