இன்று தேசிய திறனாய்வு தேர்வு : 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர், 472 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, மாநில அளவில் முதற்கட்ட தேர்வும், அதில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் இறுதி தேர்வும் நடக்கிறது.இந்த ஆண்டுக்கு, மாநில அளவிலான முதல்கட்ட தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடக்கிறது. இதில், 472 மையங்களில், ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 548 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை, 9:30 முதல், 11:00 மணி வரை, சிந்தனை திறன் தேர்வும், காலை 11:30 முதல், பகல், 1:00 மணி வரை, கல்வித்திறன் தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கே மாணவர்கள்,தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.