அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்து மணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.


வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது: 
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்க பயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.