பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்தும் காக்கும் வழிமுறைகளும்!

விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கிடைக்கும் இலவச வைஃபை சேவையை பயன்படுத்துவோர், சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிலும், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், லினக்ஸ், மாகோஸ், விண்டோஸ் கொண்ட செல்போன்களைப் பயன்படுத்துவோர் தகவல் திருட்டுக்கு இலக்காவும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அடுத்த முறை, விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் வைஃபை ஹாட்ஸ்பாட் அல்லது வையர்லெஸ் இணையத்தை பயன்படுத்தும் போது நீங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்திய அரசின் அமைப்பான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி) இது குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை-யைப் பயன்படுத்துவோர் சைபர் தாக்குதலுக்கு எளிதாக இலக்காகவும் வாய்ப்பு உள்ளது என்றும், நாட்டில் வைஃபை மூலம் தகவல் திருட்டு நடப்பது அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து சிஇஆர்டி கூறுவது என்னவென்றால், பொது இடங்களில் வைஃபையைப் பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் கிரடிட் கார்ட் எண்கள், கடவுச் சொல் (பாஸ்வேர்ட்), சாட் மெசேஜ்கள், மின்னஞ்சல்கள் அனைத்தும் சைபர் திருட்டில் ஈடுபடுவோருக்கு எளிதாக பகிரப்படுகிறது.
எனவே, பொது இடங்களில் கிடைக்கும் வைஃபையைப் பயன்படுத்தி வங்கிப் பணிகள் மேற்கொள்வதை மக்கள் முடிந்த வரையில் தவிர்த்துவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
உங்களது தகவல்களை பாதுகாக்க என்ன செய்யலாம்? உங்கள் செல்போனில் KRACK எனப்படும் தாக்குதல் நடத்தப்படாமல் தடுக்க, காஸ்பெர்ஸ்கி ஆய்வுக் கூடம் அளிக்கும் சில யோசனைகளை இங்கே பார்க்கலாம்.
பொதுவிடங்களில் கிடைக்கும் வைஃபை-யைப் பயன்படுத்தி தகவல்களைத் தேடுதல், சேட் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். பாடல்கள், ஆடியோ, விடியோக்களைக் கூட டவுன்லோட் செய்யலாம்.

ஆனால், வங்கிக் கணக்குகளை கையாள்வது, பணப்பரிமாற்றம் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்களை செய்வதைத் தவிர்க்கலாம் என்பது முதல் யோசனை.
அதே சமயம், உங்கள் செல்போனில் பிரவுஸ் செய்யும் போது, அங்கே பச்சை நிற பூட்டு ஐகான் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது, இந்த பூட்டு ஐகான் எதைக் குறிக்கிறது என்றால், நீங்கள் பயன்படுத்தும் இந்த இணையதளம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை. ஒருவேளை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளத்தை வெளியில் இருந்து எஸ்எஸ்எல்ஸ்ட்டிரிப் மூலமாக யாரேனும் அறிந்து கொள்ள முயலும் போது, இந்த பூட்டு ஐகான் மறைந்துவிடும். அந்த பச்சை நிறப் பூட்டு ஐகான் இருக்கும் வரை உங்கள் இணைதளப் பக்கம் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.
அதேப்போல், பொதுவிடங்களில் வை-ஃபை பயன்படுத்துவோர், லேப்டாப் அல்லது செல்போன்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆப்களை வைத்திருக்கிறீர்களா என்பது மட்டுமல்ல, அவற்றின் லேட்டஸ்ட் வர்ஷனை அப்டேட் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
மேலும், பொது இணைய வசதியான வைஃபையை பயன்படுத்தும் போது, அதனை அளிக்கும் மற்றும் சேவை பெறும் நபர்களுக்குள்ளான வட்டத்துக்குள் நாமும் வந்து விடுகிறோம்.

எனவே, நம்முடைய தகவல்களை பரிமாற்றம் செய்ய, வை-ஃபை சேவையை அளிப்பவர்கள் விரும்பினால் நிச்சயம் செய்ய முடியும். அவர்களாலும் நமது தகவல்களை திருட முடியும். இந்த வைஃபை நெட்வொர்க்கைப் பயன்படுத்துவோருக்கும் தகவல்களை திருட அனுமதிக்க முடியும்.
அந்த சமயத்தில், நமது செல்போன் நெட்வோர்க்கில் இருக்கும் சிறு குறைகளைப் பயன்படுத்தி, அனைத்துத் தகவல்களையும் திருடவும், மாற்றவும், நம்மை கண்காணிக்கவும் முடியும். இதுதான் சைபர் தாக்குதல்.
அரசு அளிக்கும் வைஃபை சேவையை விட, தனியார் அளிக்கும் வைஃபை சேவையில் தகவல் திருட்டு நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஓபன் வைஃபை சேவை அளிக்கும் நபர், சில மேம்பட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தி, நமது செல்போனில் இருக்கும் தகவல்களை திருட முடியும். எனவே, குடியிருப்புகள், பூங்காக்கள் போன்றவற்றில் கிடைக்கும் ஓபன் வைஃபையைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதே நலம்.
சமீபத்தில் வைஃபையில் பயன்படுத்தப்படும் WPA அல்லது WPA2 புரோட்டோகாலில் சில குறைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், இன்னும் சில வாரங்களுக்கு இது தொடர்பான வைரஸ்கள் பரவுதல், தகவல் திருட்டுக்கள் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, இந்த தவறு சரி செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும் வரையிலாவது, செல்போன், லேப்டாப்களை பொதுவிடங்களில் கிடைக்கும் வைஃபையில் இணைக்காமல் இருப்பது நல்லது.
https எனப்படும் என்கிரிப்ட் செய்யப்பட்ட சேனல்களைக் கொண்டு பயன்படுத்தும் இணையதளங்களை சைபர் குற்றவாளிகள் பார்க்க முடியாது. அதனால்தான் வங்கி, பேஸ்புக், ஜிமெயில் போன்ற முக்கிய இணையதளங்கள் https வழியாகவே தங்களது சேவைகளை செய்கின்றன.
ஒருவேளை https அல்லாத இணையதளங்களையும் https everywhere போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் பார்க்கும் இணையதளங்களை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.
எவ்வாறு இருந்தாலும் பொதுவிடங்களில் கிடைக்கும் வைஃபை-யைப் பயன்படுத்தி கிரடிட் கார்டு, வாங்கிக் கணக்குகளை கையாள்வது போன்றவற்றை செய்யாமல் தவிர்ப்பதே நலம் என்கிறது சிஇஆர்டி.