அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்,
வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்திற்கு, 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு, இரண்டு
நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை
பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000
ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறுகையில், ''அரசுப்
பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்வி சுற்றுலா
அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் பள்ளிக்கு, தலா ஒரு
மாணவர் வீதம், 100 பள்ளிகளில் இருந்து, 100 மாணவர்கள் செல்கின்றனர். '20
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஐந்து பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக
உடன் செல்கின்றனர். ''இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில்
சுற்றுலா அழைத்து செல்ல, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,
மாணவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைப்பதோடு, அறிவுசார் தேடல்
விரிவடையும்,'' என்றார்.