அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.  அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார். 
மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.10.2017 முதல் (இந்த மாதம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பு மூலம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த மாதம், அதாவது அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இன்று வழக்கமாக வழங்கப்படும். 
அரசு அறிவித்தபடி, இன்று புதிய சம்பளம் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய சம்பளம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் இன்று புதிய சம்பளம் கிடைக்காது என்றும், பழைய சம்பளமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
இதுகுறித்து, தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசு புதிய சம்பளத்தை கடந்த 11ம் தேதி தான் அறிவித்தது. வழக்கமாக 20ம் தேதியே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 20ம் தேதியே தமிழக அரசு அந்தந்த மாதத்தின் சம்பள பில் கருவூலத்தில் சமர்பிக்கப்பட்டு விடும். 
ஆனால், புதிய சம்பள விகிதத்தை கம்ப்யூட்டரில் துறை சார்ந்த அதிகாரிகள் பதிவு செய்ய தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. அதனால் இன்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்காது. பழைய சம்பளமே வழங்கப்படும். நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் புதிய சம்பள விகிதம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே நவம்பர் மாதமும் புதிய சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.