லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.
அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவ -
மாணவியருக்கு, பொதுத்தேர்வுக்கு முன், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். ஆனால், 2016ல்,டெண்டர் விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அறிவிப்பு : இந்நிலையில், 2016ல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஆறு மாதங்கள் தாமதமாக, தற்போது, லேப் - டாப் வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டு களைப் போல, லேப் - டாப்கள் திருட்டு போகாமல் தடுக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, லேப் - டாப் பெறும் மாணவர்களின், அசல் சான்றிதழில், லேப் - டாப் வழங்கப்பட்டது என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, அதன் நகலை, ஆவணமாகதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், பல மாணவர்கள், கல்லுாரிகளில் படிப்பதால், அசல் சான்றிதழ் கல்லுாரியில் இருப்பதாக கூறி, லேப் - டாப் கேட்கின்றனர். சான்றிதழ் இன்றி, லேப்டாப் வழங்கினால்,தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என, உயர் அதிகாரிகள் எச்சரித்துள்னர்.இந்நிலையில், சான்றிதழுடன் வராத மாணவர்களுக்கு, துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்து, லேப் - டாப் வழங்கும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், நிலைமையை சமாளிக்க முடியாமல், தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 2வை, 2016ல், முடித்த மாணவர்கள், இலவச லேப் - டாப் பெறவசதியாக, தற்காலிகமாக, அசல் சான்றிதழை வழங்கக்கோரி, கல்லுாரி, பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பலாம். பிரச்னை : கல்வி நிறுவன முதல்வரிடம், மாணவர்கள், 'போனபைட்' சான்றிதழ் பெற்று வந்தால், லேப் - டாப் வழங்க, வழிவகை செய்யலாம். மாறாக, எந்த சான்றும் இல்லாமல், லேப் - டாப் வழங்கினால், தலைமை ஆசிரியர்கள், எதிர்காலத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக, உயர் கல்வித் துறையுடன், பள்ளிக் கல்வித்துறை பேசி, உரிய முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.