பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது. 
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.
ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:
ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.
 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.