கூட்டுறவு தேர்தல் மதிப்பூதியத்திற்காக 4 ஆண்டாக பள்ளி ஆசிரியர்கள்காத்திருப்பு

சிவகங்கை;அதிகாரிகள் மெத்தனத்ததால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான மதிப்பூதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 2013 மார்ச் 22 முதல் ஏப்., 24 வரை நடந்தது. இதில், கூட்டுறவு பால் சங்க தேர்தலை 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நடத்தினர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் மதிப்பூதியமும், பயணப்படியும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை மதிப்பூதியம் வழங்கவில்லை.இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் பால்வளத்துறை ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதேபோல் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 2016 ஜன., முதல் பிப்., வரை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். அவர்களுக்கும் இதுவரை மதிப்பூதியம் வழங்கவில்லை. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக ஊராட்சிகளில் ஆசிரியர்கள் வேட்புமனு பெற்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டாலும், அக்காலக்கட்டத்தில் பணிபுரிந்தோருக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆசிரியர்களுக்கு மட்டும் மதிப்பூதியம் கிடைக்கவில்லை.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: கூட்டுறவு சங்க தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஆண்டுகணக்கில் மதிப்பூதியம் வழங்காதது கண்டிக்கதக்கது. கூட்டுறவு சங்கங்களில் பணம் இல்லை என்றாலும், கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கலாம். இதற்காக கடிதம் எழுதியுள்ளதாக தொடர்ந்து ஒரே பதிலையே கூட்டுறவு துணைப்பதிவாளர் கூறிவருகிறார். ஆனால் பணம் வந்தபாடில்லை.பள்ளி முடிந்து மாலை நேரங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். சிரமப்பட்டு செய்த பணிக்கு பல மாதங்களாகியும் ஊதியம் வழங்கவில்லை. 
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலுக்கான மதிப்பூதியம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. அவற்றை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.