நீட் தேர்வுக்காக 22 பயிற்சி மையம் தி.மலை மாவட்டத்தில் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், நீட் தேர்வுக்காக, 22 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இதில் பயிற்சி பெற மாணவர்கள் விபரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறினார்.


இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


திருவண்ணாமலை மாவட்ட மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியர், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற, தேவையான பயிற்சிகளை அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும், 22 இடங்களில் இலவச பயிற்சி மையம் துவங்கப்படுகிறது.


அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட, 22 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி பெற விரும்பும் மாணவர்களின் விபரங்களை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், www.tnschools.gov.in என்ற இணையதளத்தில், எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார் என்ற விபரங்களுடன், வரும், 26க்குள் பதிவு செய்ய வேண்டும். பயிற்சி நடைபெறும் நாள், நேரம் பின்னர் 
தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.