சாலையில் பட்டாசு வெடித்தால் 2,000 ரூபாய் அபராதம்

'போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளில் பட்டாசு வெடித்தால், 2,000 ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.


வரும், 18ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு உத்தரவு'இந்தாண்டு, பட்டாசால் தீ விபத்து உள்ளிட்ட, அசம்பாவிதங்கள் நிகழாத வகையில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டு உள்ளார். இந்நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பட்டாசுகள் வெடிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.இது குறித்து,

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பெட்ரோல் பங்க், குடிசை பகுதி, நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில், பட்டாசுகள் வெடிப்பதால், மக்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும், முக்கிய சாலைகளில் பட்டாசுகள் வெடிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவ தோடு, போக்குவரத்துநெரிசலும் ஏற்படுகிறது.

கட்டுப்பாடுமற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாதபடி, காலி மைதானம் போன்றவற்றில் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மீறுவோருக்கு, எரியக்கூடிய பொருட்களால் ஆபத்தை ஏற்படுத்துதல்; கவனக் குறைவால் விபத்தை ஏற்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவின் கீழ், 1,000 - 2,000 ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்.

அதே போல, முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், மருத்துவமனைகள் அருகிலும், பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -