CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற  நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்?
2003ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எப்போது கொடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 
இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சித்திக் சார்பில் அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்தி நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  கடந்த 2004 ஆகஸ்ட் 4ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. 
இத்துடன் அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து பொது கணக்கில் செலுத்தப்படுகிறது. மார்ச் 2017 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.18,016 கோடி இருப்பு உள்ளது. 2016-17 கணக்கு சீட்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டு, இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியம் தொடர்பாக 2016 பிப்ரவரி 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு, மரணம், பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகை உடனடியாக கொடுக்கிறோம். கருவூலம், கணக்கு துறை ஆணையர் அறிக்கைபடி 2017 ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதிய  திட்டத்தின் கீழ் கணக்கை முடிக்க கேட்டு 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
இதில் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125,24,24,317 வழங்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான ஆவணங்கள் கிடைத்தபிறகு ஒப்புதல் வழங்கப்படும். அரசு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு (இன்று)  நீதிபதி ஒத்திவைத்தார்.
* 2003 ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
* 2004 ஆகஸ்ட் 6ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதை பின்பற்றி 2004 ஜனவரி 1 முதல் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.