தமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி

தமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா
தோல்வியடைந்துள்ளார்.

சாரணர்-சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது.

தலைவர் பதவிக்கு பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த பதவிக்கு எச்.ராஜா போட்டியிடுவதால் இத்தேர்தலில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் ஹெச்.ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 285 வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.